தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்காக, வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு, இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
மார்க்சிஸ்ட் மனு தாக்கல்
தி.மு.க. கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில், தி.மு.க. வேட்பாளர்கள் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.கே.ரெங்கராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள்
காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரியும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அவர்கள், இன்று (சனிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 2 பேர் போட்டியிடுவார்கள் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாலகங்கா ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திடீர் திருப்பமாக, இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று ம.தி.மு.க. அறிவித்து விட்டது.
பா.ம.க. ஆதரவு
தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வற்புறுத்தி வந்தார். ஆனால், இறுதியில் பா.ம.க. தனது நிலையை மாற்றிக்கொண்டு, தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தது.
பா.ம.க மற்றும் ம.தி.மு.க. மேற்கொண்ட நிலை காரணமாக டெல்லி மேல்-சபை தேர்தலில் நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. என்றாலும், தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட முன்வராததால் அ.தி.மு.க. சார்பில் 2-வது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதுபற்றி இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
போட்டியின்றி தேர்வு?
அ.தி.மு.க. சார்பில் 2-வது வேட்பாளர் நிறுத்தப்படாவிட்டால், 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இறுதியாக 6 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள்.
எனவே, வருகிற 26-ந் தேதி அன்று தேர்தலுக்கு அவசியம் இருக்காது என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாளான 19-ந் தேதி அன்று, 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.