"தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு மக்களும், போலீசாரும்தான் காரணம்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
காவல் உயர் பயிற்சியகம்
சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரி என்ற கிராமத்தில் 129 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.48 கோடியே 23 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக கட்டிடம் மற்றும் சென்னை பரங்கிமலையில் ரூ.11/2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா வண்டலூர் ஊனமாஞ்சேரியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நிதிநிலை அறிக்கை
நான் சட்டமன்றத்திலே வீற்றிருந்த அந்தக் காலக் கட்டத்தில் சட்டமன்றத்திலே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களால், அமைச்சர்களால்- நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் போன்றவர்களால் படிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில்-ஐந்தாறு ஆண்டு காலம் தொடர்ச்சியாகப் பார்த்தால்-100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிதி நிலை அறிக்கை மொத்த மதிப்பீடு இருந்ததில்லை. அப்போது இருந்த பணத்தின் மதிப்பு-இன்றைக்கு அந்தப் பணத்தின் மதிப்பு என்ன என்பதை நாம் எண்ணிப் பார்த்தால் புரியும்.
அந்த காலத்தில் என்னுடைய இல்லத்திலேயே, என்னுடைய தகப்பனார் கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள ரெயில்வே நிலையம் உள்ள நகரத்திற்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது என்னுடைய தாயாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "அஞ்சுகம், செய்தி தெரியுமா, பவுன் விலை இருபது ரூபாய் ஆகிவிட்டது'' என்று வேதனையோடு சொல்வார். "அப்படியா'' என்று என் அம்மா ஆச்சரியத்தோடு கேட்பார்கள்.
பவுன் விலை இருபது ரூபாய் என்று ஆனது என் தந்தைக்கு கோபத்தையும், என் அம்மாவிற்கு சோகத்தையும் வெளிப்படுத்துகின்ற செய்தியாக அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு பவுன் விலை இருபது ரூபாய் இல்லை. ரொம்பக் குறைவு, பத்தாயிரம் ரூபாய் என்கின்ற அளவிற்கு உயர்ந்திருக்கின்ற காலக் கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைச் சொல்வதற்கான காரணம், அன்றைக்கு இருந்த பணத்தின் மதிப்பு எந்த அளவில் என்பதற்காகத் தான்.
போலீஸ் மாத சம்பளம் ரூ.80
ஒரு போலீஸ்காரருக்கு அப்போது மாதச் சம்பளம் 80 ரூபாய் என்று இருந்தது. அதுவே அந்தக் காலத்தில் பெரிய சம்பளம். பெரிய வருமானம். இதை சின்ன வருமானம் என்று யாராவது கருதினால், பெண் பார்க்கப் போகும்போது கூட, பெண் வீட்டார் கேட்பார்கள் "என்ன மாப்பிள்ளைக்கு எவ்வளவு வருமானம்?'' என்று கேட்பார்கள். மாதம் ரூபாய் 80 ஊதியம் என்பார்கள். மேல் வரும்படி ஏதாவது கிடைக்குமா?'' என்று மீண்டும் கேட்பார்கள். "மேல்வரும்படி'' என்பதற்கு என்ன பொருள் என்பதை நான் இப்போது கூற விரும்பவில்லை. "மேல்'' வரும்படி, "பிமேல்'' என்றெல்லாம் இல்லை, இரண்டு வரும்படியும் ஒரே வரும்படி தான். காரணம் அப்போது 80 ரூபாய் ஊதியத்தில் தங்கள் குடும்பத்தை நடத்த முடியாமல், காவல் துறை கஷ்டப்பட்டது எனக்கு நன்றாகத் தெரியும்.
இதற்கு உடனடியாக ஒரு விடிவு காலத்தை உருவாக்க வேண்டு மென்று எண்ணியதின் காரணமாகத் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக போலீசாருடைய நிலைமைகளைத் தெரிந்து அவர்களுடைய சம்பளத்தை உயர்த்த, அவர்களுடைய கஷ்டங்களைப் போக்க, அவர் களுடைய தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப என்னென்ன வசதிகளை பெருக்க வேண்டுமோ, அவைகளைப் பெருக்கவேண்டுமென்பதற்காக - முதல் போலீஸ் கமிஷனை நியமித்தது என்னுடைய தலைமையிலே இருந்த அரசு தான்.
80 ரூபாய் என்றிருந்த சம்பளம் முதன் முதலாக ஒரு போலீஸ்கார நண்பருக்கு 200 ரூபாய் 300 ரூபாய் என்று உயர்ந்தது என்றால் அந்தக் கமிஷனை நியமித்த பிறகு தான். அதன் பிறகு இரண்டாவது போலீஸ் கமிஷனை பி. சபாநாயகம் தலைமையிலே நியமித்ததும் தி.மு.க. ஆட்சியிலே தான். அதிலும் 120 பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகளிலே முக்கால் பகுதியை நிறைவேற்றியதும் என்னுடைய தலைமையிலே அன்றைக்கு இருந்த தி.மு.கழக ஆட்சி தான்.
பயிற்சியகம்
இந்த வகையில் அவர்களுடைய வாய்ப்புகளை, வசதிகளைப் பெருக்க நான் முனைந்ததின் அடிப்படையிலே இங்கே நாம் காணுகின்ற இந்தப் பயிற்சியகம் அமைந்திருக்கின்றது.
இந்தப் பயிற்சியகத்தை உருவாக்க ஏறத்தாழ 50 கோடி ரூபாய் வரை இந்தப் பகுதியிலே போலீஸ் பயிற்சிக்காக நாம் செலவழித்திருக்கிறோம் என்றால், அந்தப் பயிற்சி அவர்களுடைய உடல் வலிவு பெருக வேண்டும் என்பதற்காக மாத்திரமல்ல.
காவல்துறை நண்பன்
அவர்கள் பெறுகின்ற வலிவு, அவர்கள் பெறுகின்ற பொலிவு அத்தனையும் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று அதிலே ஒரு தொடர்பு இருக்கின்ற காரணத்தினாலே தான் 50 கோடி, 60 கோடி என்று தான் அரசு செலவழித்து இதுபோன்ற காரியங்களைச் செய்ய முன் வந்திருக்கின்றது. அதை உணர்ந்து நம்முடைய காவல் துறை நண்பர்கள் நிச்சயமாக நடக்கிறார்கள், நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
போலீஸ்துறை என்றாலே இன்றைக்கு சில அரசியல் கட்சிகளால் உடனடியாக விமர்சிக்கப்படுகின்ற ஒரு துறையாக இருக்கின்றது. இது அந்த அரசியல் கட்சிகள் எடுத்த இன்றைய நிலையல்ல. அது வெள்ளைக் காரன் காலத்தில் ஏற்பட்டது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மீது நமக்குள்ள கோபத்தை, இவர்கள் மூலமாகக் காட்டிக் கொண்ட நிகழ்ச்சி தான் அப்படி. அப்படி ஏற்பட்ட அந்த நிகழ்ச்சி வெள்ளைக்காரன் சென்ற பிறகும் விட்ட குறை, தொட்ட குறை என்பதைப் போல, அது இன்றைக்கும் நீடிக்கின்றது. அன்றைக்கு ஏற்பட்ட வெறுப்பு - வெள்ளைக்காரன் காலத்திலே நம்மை அடிமைகளாக நடத்துவதற்கு, இவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்கள், அந்தப் பழைய நினைப்பிலே இன்றைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்தால் ஒரு கோபம் வருகிறது. இல்லை என்று சொல்லவில்லை.
அவர்களும் நம்முடைய நண்பர்கள் தான், நம்மவர்கள் தான் என்ற எண்ணம் உண்மையாக தெளிவாக வர முடியும். அதற்கு இரு சாராரும் - பொது மக்களும் சரி, போலீஸ் துறை நண்பர்களும் சரி - பயிற்சிப் பெற்றாக வேண்டும். அந்தப் பயிற்சியையும் இந்த மைதானத்திலே கற்பிக்கின்றவர்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
தீவிரவாதம்
உலகத்தை நாம் பார்க்கிற நேரத்தில் இந்தியா எவ்வளவோ மேல். பக்கத்து நாடுகளைப் பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய பாரதம் எவ்வளவோ மேல். பாரத்திற்குள்ளேயே அருகருகே இருக்கின்ற மாநிலங்களைப் பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய தமிழ்நாடு அவைகளையெல்லாம் விட எவ்வளவோ மடங்கு மேல். அப்படிப்பட்ட இந்த மேலான நிலையை தமிழகத்திலே இந்தச் சூழ்நிலையிலே கூட உலகம் இன்றைக்குப் பல உபத்திரவங்களையெல்லாம் காணுகின்ற இந்தக் காலத்திலே கூட பல தீமைகளை பக்கத்திலே உள்ள தேசங்கள் சந்திக்கின்ற காலத்திலே கூட, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் அதற்கு இங்கேயுள்ள மக்களுடைய ஒத்துழைப்பும், அந்த மக்களிடத்திலே உங்கள் நண்பனாகப் பழகுகின்ற நம்முடைய அன்பிற்குரிய காவல்துறை நண்பர்களும் தான் அதற்குக் காரணம் என்பதை எண்ணும்போது - நான் ஏதோ காவல் துறையைப் புகழ்ந்து விட்டேன் என்று சாதாரண மக்களும் எண்ணிக் கொள்ளக் கூடாது.
வீட்டில் களவு
காவல் துறை புகழப்பட வேண்டிய ஒன்றா அல்லவா என்பதற்குப் பட்டி மன்றம் தேவையில்லை. நாம் ஒவ்வொரு முறையும், ஒரு வீட்டிலே களவு போய் விட்டால், பத்திரிகைகளிலே செய்தி வருகின்ற நேரத்தில் களவு போனதற்காக கண்டிக்கிறோம், கவலைப்படுகிறோம், போலீஸ் என்ன செய்கிறது என்று ஆத்திரப்படுகிறோம். ஆனால் நம்முடைய சுபாவம் மறுநாள் அந்தக் களவாடிய திருடர்கள் பிடிபட்டார்கள், ஐந்து பேர் கைது, ஆறு பேர் கைது, அவர்கள் எல்லாம் சிறையிலே அடைக்கப்பட்டார்கள் என்று செய்தி வரும்போது, நாம் அதைப் பார்த்து பரவாயில்லை போலீஸ் என்று என்றைக்கும் சொன்னது கிடையாது.
ஏனென்றால் சத்தியம் செய்து கொண்டிருக்கிறோம், போலீசை பாராட்டுவதே இல்லை என்று சிலர் சத்தியம் செய்து கொண்டிருக்கிறோம். அந்தச் சத்தியத்தை நாம் மீட்டுக் கொண்டு, கொஞ்சம் அவர்களையும் பாராட்டுவோம், போனால் போகிறது என்று நல்லது செய்பவர்களைப் பாராட்ட வேண்டும், அல்லது செய்பவர்களை கண்டிக்க வேண்டும். இந்த இரண்டும் நியாயப் பூர்வமாக நம்முடைய உள்ளத்திலே இருந்தால் தான் - நாம் கடைப்பிடித்தால் தான் நம்முடைய நாட்டில் குற்றங்கள் மேலும் மேலும் உற்சாகத்தோடு கண்டுபிடிக்கப்படும்.
தவறு நடக்கவில்லையா?
ஒரு போலீஸ் இருக்கின்ற காரணத்தாலேயே அந்த ஊரிலே தவறே நடக்காது என்று எண்ணிக் கொள்ள முடியாது. எங்கும் தவறு நடைபெறும். அவ்வளவு பெரிய பாரதத்திலே தர்மரைப் போன்ற மன்னர்களே இல்லை என்றார்களே, தர்மர் வாழ்ந்த காலத்திலே தவறு நடக்க வில்லையா? ஏன் ராமன் வாழ்ந்த காலத்திலே தவறு நடக்கவில்லையா? ராமபிரான் ஜீவகாருண்ய சீலர், காருண்ய வள்ளல் என்றெல்லாம் கம்பர் வர்ணித்தாரே, அவர் காலத்திலே இப்படிப்பட்ட காரியங்கள் நடைபெற வில்லையா? நடந்திருக்கிறது. எப்போதும் நடந்திருக்கிறது. ஆனால் ராமன் இருந்த காலத்திலே தான் ராவணனும் இருந்தான் என்று ராமாயணம் சொல்லுகிறது. இப்போது மாத்திரம் பெண்கள் கடத்தப்படவில்லை, அன்றைக்கே அவ்வளவு பெரிய சீதையே கடத்தப்பட்டாள் என்று நாம் படிக்கவில்லையா, அதற்காக அன்றைக்கு இருந்த காவல் துறையை யாரும் கிண்டல் செய்யவில்லை, கேலி செய்யவில்லை, கண்டிக்கவில்லை. அதைப் போல இன்றைக்கு அவரவர்கள் கடமையை அவர்கள் செய்ய நாம் குறுக்கே நிற்காமல், அவர்களுக்கு நாம் துணையாக இருந்து அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் அவர்களோடு சேர்ந்து, நம்முடைய தோழமையை வளர்த்துக் கொண்டு, அந்தத் தோழமை நம்முடைய நன்மைக்காகப் பயன்படட்டும் என்று இல்லாமல், மக்கள் நன்மைக்காக, சமுதாய நன்மைக்காக, நாட்டு நன்மைக்காகப் பயன்பட வேண்டும் என்கின்ற அந்தப் பயிற்சியைப் பெற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, உள்துறை செயலாளர் எஸ்.மாலதி, மூர்த்தி எம்.எல்.ஏ., போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.பி.ஜெயின், காவல் துறை பயிற்சி டி.ஜி.பி. நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் வரவேற்று பேசினார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அம்சங்கள்
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம், பயிற்சி உதவி ஆய்வாளர்கள் தங்கும் விடுதி, பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தங்கும் விடுதி, வெடிமருந்து காப்பகம், தடயஅறிவியல் ஆய்வகம், தொழில்நுட்ப மையம், தியான மையம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், கூடைப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், அணிவகுப்பு மைதானம் உள்பட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறும் போலீஸ்காரர்களுக்கு குளியல் அறை மற்றும் கழிப்பறை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.