பாகிஸ்தான் சிறையில் உள்ள உள்ள இந்திய கைதி சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் , அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 14 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று உளவு பார்த்ததாக கூறி சரப்ஜித் சிங் என்ற இந்தியரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சரப்ஜித் சிங் மறுத்தார்.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் அரசு கடந்த 17 வருடங்களாக சரப்ஜித் சிங்கை லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளது.
இதுதொடர்பாக லாகூர் நீதிமன்றம் அவருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதையடுத்து, கடந்த 2006ல் சரப்ஜித் சிங் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதைதொடர்ந்து, அதிபர் முஷாரப்புக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், முஷாரப்பும் கருணை மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளாது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில்,சரப்ஜித் சிங்கை காப்பாற்றும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சரப்ஜித் சிங் குடும்பத்தினர் கோரிக்கை மனு அனுப்பினர்.இதனைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை தடுத்தும் நிறுத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் , தற்போதைய சூழ்நிலையில் சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவது சரியான நடவடிக்கையாக இருக்காது என பாகிஸ்தான் அதிகாரிகளிட தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.