இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நாட்டுக்கு ராணுவ உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பிரதமருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதியுள்ள கடித விவரம்:
இலங்கைக் கடற்படையினரால் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டு வரும் தமிழக மீனவர்களின் உயிர்ப் பிரச்னையை இந்திய அரசு மிகவும் மெத்தனப் போக்கோடு அணுகுவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இந்திய மீனவர்கள் மீது மென்மேலும் தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுத் தள்ளுவதும், கொல்லுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஆனால், நமது மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், இலங்கைக் கடலோரத்தில் நடந்தவை என்று தங்கள் (பிரதமர்) கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது மனவருத்தம் அளிக்கிறது.
இலங்கையில் தமிழர் ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசுப் படையால் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அரசு இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கத் தவறியது அவமானத்துக்கு உரியது.
இதற்கு மாறாக, இலங்கை அரசு தனது ராணுவ தாக்குதல்களைத் தொடர்வதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், ராணுவத் தளவாடப் பொருள்களையும் தாராளமாக வழங்கியது.
இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு இந்திய அரசு வரவேற்பு அளிக்கிறது. பொன்சேகாவோ, இந்தியாவின் உறுதியான திட்டமிட்ட உதவியோடு எங்களது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று சவால் விட்டுப் பேசுகிறார்.
இதற்கு, இந்திய அரசு மறுப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. மேலும், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய அரசின் செயல்பாடு, அணுகுமுறை, எண்ணம் அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுக்கு செய்யும் ராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.