இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் முதல்வருடன் பேச அனுமதி கோரி அனுப்பி வைத்த கடிதத்திற்கு 6 மாதங்களாகியும் பதிலில்லை என மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை அலட்சியம் செய்யும் போக்கை தமிழக காவல் துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு காரணம் பொலிஸார் சட்டம், ஒழுங்கை பராமரிக்காமல் வேறு வேலைகளில் தங்கள் கவனத்தை செலுத்துவதுதான்.
சமூக விரோதிகளை ஈவு இரக்கமின்றி ஒடுக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி காவல் துறைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த நடவடிக்கை சட்ட வரம்புக்குட்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம்.இலங்கை இனப்பிரச்சினையில் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்ல நான் முயற்சிகள் மேற்கொண்டேன். தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டேன்.
அப்போது பிரச்சினைக்கு நான் தீர்வு காண்கின்றேன் என முதல்வர் கருணாநிதி எனக்கு ஓர் கடிதம் எழுதினார். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் முதல்வர் சார்பில் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பேரில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டேன்.
அதன் பின்னர் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நான் தங்களைச் சந்திக்க அனுமதி தரவேண்டும் என முதல்வருக்குக் கடிதம் எழுதினேன். கடிதம் அனுப்பி சுமார் 6 மாதங்களாகியும் இதுவரை அவரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. என்னுடைய போராட்டத்தை நிறுத்துவதற்குக் காட்டிய முனைப்பை, அவர் இலங்கைத் தமிழர்களுக்கு மருந்துகள் அனுப்புவதற்குக் காட்டவில்லை. இதனால் நான் சேகரித்து வைத்திருந்த ஏராளமான மருந்துகள் வீணாகிவிட்டன என்றார்.