மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதல் நிவாரணநிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, "உரியநேரத்தில் உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின்
தென்மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக பெய்த மழையினால் விவசாய பயிர்கள் பலத்த சேதம் அடைந்தன. பல இடங்களில் குளங்கள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்வையிட்டார்.
நிவாரண உதவிகள்
அதன் பிறகு நெல்லை டவுன் வழுக்கு ஓடை பகுதியை பார்வையிட்டு, அங்கு வெள்ள நிவாரண உதவிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் கன மழையினால் முழுவதும் சேதம் அடைந்த 3 வீடுகள், பகுதி சேதம் அடைந்த 13 வீடுகளுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்எண்ணை ஆகியவை நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
நிவாரண உதவிகளை வழங்கிய பிறகு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டையை அடுத்த கருங்காடு சென்றார். அங்கு சேதமடைந்த நெல்பயிர்களை விவசாயிகள் மு.க.ஸ்டாலினிடம் காட்டினார்கள். விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
ரூ.10 ஆயிரம் நிதி
பின்னர் அழகியபாண்டியபுரம், சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
ராதாபுரம் தொகுதி கண்ணநல்லூர் சென்று மழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்களை பார்வையிட்டார். அங்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கவேண்டும் என்று அமைச்சரிடம் முறையிட்டனர்.
12 ஆயிரம் ஹெக்டேர் பாதிப்பு
வெள்ளசேத பகுதிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல பொதுச்சாலைகள் மற்றும் நகர சாலைகள் 331 கிலோ மீட்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளது. 336 குடிசைகள் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கூடுதலாக வழங்கப்படுமா?
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது போதாது என்கிறார்கள். கூடுதலாக நிதி வழங்கப்படுமா?'' என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், "மத்திய அரசு ஒரு ஹெக்டேருக்கு நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் நிர்ணயித்துள்ளது. கூடுதலாக வேண்டும் என்று நெல்லை-தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இது சம்பந்தமாக கோட்டையில் முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு உரிய நேரத்தில், உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பதில் அளித்தார்.