நாட்டின் மின்சார தேவைக்காக அணு மின்சக்தியை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
அடிக்கல்நாட்டு விழா
அமெரிக்காவோடு செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதை அமல் படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி புறநகர் பகுதியான பாவனா என்ற இடத்தில் பிரகதி வாயு மின் நிலையத்தின் 3-வது பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
1500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி பிரிவு, 2010-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும். இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
60 சதவீத மின்சாரம்
இந்தியாவின் மின்சார தேவையானது, பொருளாதார வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாம் நம்முடைய கடமையில் தவறியவர்களாகி விடுவோம்.
இந்தியாவில் ஏராளமான நிலக்கரி கிடைக்கிறது. 60 சதவீத மின் உற்பத்தி, நிலக்கரி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல நீர் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மாற்று மின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு உறுதி
எனவே, சுற்றுச்சூழல் சீர் கேடு அடையாமல், மிக குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்வதற்கு அணு மின் உற்பத்தி திட்டமே சிறந்தது. தூய்மையான மின் உற்பத்திக்கு அணுமின்சக்தியே சிறந்தது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதை மேம்படுத்துவது அரசின் கடமையாகும்.
நகர மயமாக்கல் அதிகரித்து வருவதால் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை மேம்படுத்துவது அவசியம். 3 சதவீதமாக இருக்கும் அணுமின் உற்பத்தியை 10 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.