தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதனை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ஐதராபாத் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் அறிவிக்கப்படாத போரால் அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் சம்பவங்களால் இந்தியாவுக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பலர் கொல்லப்படுவதும், அவர்கள் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு சிறிலங்கா அரசுக்கு நெருக்குதல்களை அளிக்க வேண்டும். தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதனை இந்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய அரசு தமது கடலோர காவல் படை பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இந்திய மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும்.
கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.