துர்கா உருவத்தில் சோனியாவை சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, சோனியா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துர்கா உருவத்தில் சோனியா
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீல் சுதிர் ஓஜா என்பவர், ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜுன் 21-ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை துர்கா உருவத்தில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப்படம், அப்போதே தொலைக்காட்சிகளில் படம் பிடித்து ஒளிபரப்பப்பட்டது. பத்திரிகைகளும் வெளியிட்டன.
அந்த போஸ்டரை முரதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்து தயாரித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து சோனியா காந்தியும் குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த போஸ்டரால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது.
ஆகவே, சோனியா உள்ளிட்ட மூவர் மீதும் இ.பி.கோ. 295, 295(ஏ) (மத உணர்வுகளை புண்படுத்துதல்), 120(பி) (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.
அடுத்த மாதம் விசாரணை
இந்த மனு, மாவட்ட நீதிபதி எச்.கே.ஸ்ரீவஸ்தவா முன்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை அவர் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். மேலும், அதை விரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். விரைவு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் இம்மனு விசாரணைக்கு வருகிறது.