விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது அகில இந்திய மாநாடு கோவையில் இன்று துவங்கியது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
அடிப்படை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது. உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை தேவையுள்ள பொருட்களை பொது விநியோக திட்டத்தில் ஏழை மக்களுக்கு வழங்குவதிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது.
கேரளா, மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக குறைத்துவிட்டது.
பணவீக்கம் கடந்த 13 மாதங்களில் 6.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகளவில் நிலவும் சந்தை மாற்றங்களே இதற்கு காரணம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் நியாயப்படுத்துவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.