சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பா.ம.க.நிறுவனர் ச.ராமதாஸ்
கடிதம் எழுதியுள்ளார். தமிழர் சிக்கல் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுடன் சேர்ந்து இரு நாள்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இச்சிக்கல் தொடர்பாக தங்களின் போராட்டங்கள் தொடரும் என ராமதாஸ் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். வேதனை மிகுந்த உள்ளத்தோடு இக்கடிதத்தை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்.
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை சிங்கள அரச தன்னிச்சையாக ரத்துசெய்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான போர்வெறி நோக்கில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குகிறது இலங்கை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தன்னுடைய மண்ணில் காலூன்ற இடம்கொடுத்துவருகிறது. இலங்கையின் ஆயுதத் தொகுப்பிற்கு இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக அறிகிறோம்.
இவற்றைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரகப் போரை நடத்துவதுடன், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களையும் தாக்கிவருகிறது. பக்கத்தில் வேறெந்த நாடும் இல்லாத நிலையில் சூப்பர்சானிக் ராகபோர்விமானத்தை இலங்கை வாங்கியிருப்பதாகவம் அறிகிறோம்.
யாழ்ப்பாணம் பகுதியில் ஆயிரம் சதுரகிலோமீற்றர் பகுதி மக்கள் யாரும் வாழாத பகுதியாக மாறியிருப்பதற்கு இலங்கை அரசின் போர்நடவடிக்கைகள்தான் காரணம். உள்நாட்டிலேயே 15 லட்சம் பேர் அகதிகளாக இருக்கிறார்கள். இலங்கையில் மனிதஉரிமை அமைப்புக்கள் எல்லாமே கருத்துகூறியுள்ளன.
இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்கு ராணுவம் மூலம் தீர்வு காணமுயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆள்கடத்தலும் ஆகும்.
அரசியல் தீர்வு ஏற்பட்டால், இலங்கையில் தமிழர்களின் அரசியல் உறுதியை நிலைநாட்டும் என்பதை அறிந்துதான், சிங்களவர்கள் பேசமறுக்கின்றனர்.
இந்நியாவில் உள்ள ஆறுகோடித் தமிழர்கள், பாக்நீரிணைக்கும். மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சகோதர, சகோதரிகள் அழிக்கப்படுவதைப் பார்க்கமுடியாது.
எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. இந்தியா இப்போதே செயலாற்றவேண்டும். போர்வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும்.
பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்யவேண்டும். பேச்சுநடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.