31-03-2008
Article by:
Sujee
 கருணாநிதி |
|
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. என்ன விலை கொடுத்தாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். எதற்கும் ஒரு எல்லை உண்டு. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வருகிற 9ம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திலிருந்து ஒரு பஸ்சையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் சானல்களை ஒளிபரப்ப விட மாட்டோம். தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் எச்சரிக்கையை நேற்று முதல்வர் கருணாநிதி நிராகரித்தார். சென்னை தி.நகர். வடக்கு உஸ்மான் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை என்று இரண்டு பெயர்களை இந்தப் பாலம் கொண்டுள்ளது. இது இரண்டு சாலைகளை மட்டும் இணைக்கும் பாலம் அல்ல, இரு சமயங்களை இணைக்கும் பாலம். இந்த இணைப்புதான் நாட்டில் வர வேண்டும் என்று முற்போக்கு எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன.
அந்த சமயங்கள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டும் என்று பெரியவர்கள், இளைஞர்கள் விரும்புகின்றனர். அந்தப் பாலங்கள்தான் மேம்பாலம் எனப்படும். அதுபோன்ற பாலங்கள் அமையாவிட்டால் அது மேம்பாலங்கள் அல்ல. மேம்பாலம் என்பது மேன்மையான பாலம். மேம்படுதல் என்றால் மேன்மை அடைதல் என்று பொருள்.
ஒன்றுபட முடியாத இரு சக்திகளை ஒன்றுபடுத்தி பாலமாக அமைந்தால் அதுதான் மேம்பாலம். அந்த மேம்பாலம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் அமைந்திட வேண்டும் என்று விரும்புகிறேன். எண்ணைப் போல நீங்களும் அந்த விருப்பத்தைப் பெற வேண்டும்.
இங்கே இந்தப் பாலம் கட்டிய நிலையைப் பார்க்கிறேன். இதை கர்நாடக அனுமதிக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. சென்னையில் கட்டுகிற பாலத்தை கட்டாதே என்று சொல்லுகிற அந்தக் குணத்தை கர்நாடகா பெற்றிருக்கும் என்றே கருதுகிறேன். கர்நாடகத்தில் இருக்கிற ஒரு பிரகஸ்பதி ஒரு கட்சித்தலைவர், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர், அவர் தேர்தலில் நிற்க வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ஓகனேக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, ஓகனேக்கல் எங்களுக்குச் சொந்தம் என்கிறார்.
|