திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் மரணமடைந்ததற்கு, தமிழக அரசால் வாங்கப்பட்ட மலிவு விலை தடுப்பூசியே காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக அரசு, அந்த மருந்தை வழங்கியது மத்திய அரசுதான் என கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்குவது மத்திய அரசுதான்.தற்போது திருவள்ளூரில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான தட்டம்மை தடுப்பூசியை, ஐதராபாத்திலுள்ள ' ஹியூமன் பயாலஜிக்கல் இன்ஸ்டிடியூட்' டிலிருந்து வாங்கி மாநில அரசுக்கு வழங்கியது மத்திய அரசுதான்.பிப்ரவரி 2008 ல் தயாரிக்கப்பட்ட அந்த தடுப்பூசியின் காலாவதி 2010 ஜனவரி வரை உள்ளது.
எனவே தமிழக அரசு காலாவதியான தடுப்பூசியை வாங்கி குழந்தைகளுக்கு போட்டதாக ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
மேலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தடுப்பூசிகளையும், மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் மருத்துவமனைகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டும் தவறானது.
மின்தடை ஏற்பட்டால் அதனை சமாளிக்க அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அரசு ஜெனரேட்டர்களை வழங்கியுள்ளது.மேலும் தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்கான வெப்ப நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் இறந்துபோன குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மத்தியக் குழு , குழந்தைகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி முறையாக பராமரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.