போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி 'பாம்' பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல 'பாம்' பாலாஜி.எதிரிகளை நாட்டு வெடிகுண்டு மூலமும் , பெட்ரோல் குண்டு வீசியும் கொன்று வந்ததால் அவனுக்கு இந்த பெயர் ஏற்பட்டது.
இவன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சை பெரிய கோவில் வாசலில் நின்றுகொண்டிருந்த ரவிச்சந்திரன் என்பவர் மரம கும்பல் ஒன்றால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.விசாரணையில், 'பாம்' பாலாஜி தலைமையில்தான் அந்த் கும்பல் இந்தக் கொலையை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதனையடுத்து பாம் பாலாஜியை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.போலீஸார் அவனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.அவனது நடமாட்டம் குறித்து உளவாளிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சி அருகே உள்ள சர்க்கார்பாளையம் என்ற இடத்தில் வைத்து 'பாம்' பாலாஜி வழக்கம்போல் நடைபெறும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் இன்று காலை 4 மணியளவில் போலீஸார், சர்க்கார்பாளையம் அருகே உள்ள பனையபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 'பாம்' பாலாஜியை வாகனத்தை நிறுத்தும்படியும் கூறினர்.
ஆனால் அவன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினான்.அவனை போலீஸார் விரட்டி சென்று ஒரு இடத்தில் சுற்றி வளைத்தபோது அவன் தன்னிடமிருந்த நாட்டு வெடிகுண்டை வீசினான்.அது வெடிக்காமல்போனதால் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டான்.இதில் சப் - இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கபிலன் 'பாம்' பாலாஜியை நோக்கி சுட்டார். இதில் மார்பில் குண்டுபாய்ந்து 'பாம்' பாலாஜி அந்த இடத்திலேயே சுருண்டுவிழுந்தான்.உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினர்.
இத்தகவலை போலீஸார் தெரிவித்தனர்.