தொழிலாளர் நலனுக்காக தி.மு.க. அரசு அடுக்கடுக்காக பல திட்டங்களை தீட்டி உள்ளது என்று மே தின வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட மே தின வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பணிக்கு ஏற்ற சம்பளம்
மே நாள் உலகமெங்கும் உழைப்பாளர் பெருமையை உரைத்திடும் திருநாள். வயிறார உண்டு சுவைத்திடவும் உலக மக்களுக்கு தேவையானவற்றை உருவாக்கிட தினம் தினம் உழைத்திடும் தொழிலாளர்களை நினைந்து மகிழ்ந்து நன்றியுடன் போற்ற வேண்டிய பொன்னாள்தான் இந்த மே நாள். இந்த நாளில் தொழிலாளர் சமுதாய தோழர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய மே தின நல்வாழ்த்துகள்.
1929-ம் ஆண்டு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில், "தொழிலாளர்கள் ஆற்றுகின்ற பணிக்கு ஏற்பவும், அவர்களுடைய தேவைக்கு ஏற்பவும் ஊதியம் வழங்கியாக வேண்டும்'' என்றார் தந்தை பெரியார். "1889-ம் ஆண்டு பாரிசில் நடந்த சர்வதேச சமதர்ம மாநாட்டில், மே மாதம் முதல் தேதியை உலகப் பாட்டாளி மக்களின் விடுதலை நாளாகக் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றிற்று. அதிலிருந்து மே தினம் உலகிலே எல்லா நாடுகளிலும் பாட்டாளிகளின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது'' என்றார் அண்ணா.
வீட்டு மனைப்பட்டா
அவர்களின் கொள்கை வழியில் தி.மு.க. அரசு செயல்பட்டு, தொழிலாளர் நலன் காத்திடும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. 1969-ம் ஆண்டில் தொழிலாளர் நலனுக்கு தனி அமைச்சகம்; 1969 முதல் மே தினத்திற்கு ஊதியத்துடன் அரசு விடுமுறை;
1971-ல், தொழிலாளர் நல நிதி, தொழிலாளர் நல வாரியம் அமைப்பு; ஒப்பந்தத் தொழிலாளர் நலனுக்கு தனிச்சட்டம்; குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம்; 1 லட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா;
1972-ல் தொழிலாளர்க்கும் அரசு ஊழியர்க்கு உள்ளது போல் பணிக்கொடை; விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் லாரி, ஆட்டோ, தனியார் கார், டாக்சி, பஸ் ஓட்டுனர்களுக்கும், கட்டடக் கட்டுமான தொழிலாளிகளுக்கும் தகுந்த நிவாரணங்கள் வழங்கிட தொழில்-விபத்து நிவாரண நிதி;
விவசாய தனிச் சட்டம்
1973-ல் தொழிலாளர் நலன் குறித்து பயிற்சிகள் அளித்திட தொழிலாளர் கல்வி நிலையம்; 1997-ல் சென்னை நேப்பியர் பூங்காவுக்கு மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைத்தது; 1997-ல் ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வு ஆதாரங்களுக்கு வழிகாணும் நோக்கில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம்;
1997-ம் ஆண்டில் அமைத்த கோலப்பன் குழு அளித்த பரிந்துரைகளின்படி விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம்; 2000-ம் ஆண்டில் விவசாய தொழிலாளர் நலவாரியம்;
2006-ல் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் என்ற தனி சட்டம் இயற்றி, விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், ஈமச் சடங்கு உதவி, விபத்துக்கால இழப்பீட்டு உதவி என்பன போன்ற பல உதவிகள்;
20 சதவீத போனஸ்
அமைப்பு சாரா தொழில்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நல வாரியங்கள்; தொழிலாளர்களுக்கு தடையின்றி 20 சதவீத போனஸ்; ஊக்கத்தொகை; நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாய கூலிகளாகவும் வேறுபல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி;
உழைப்பாளர் சமுதாயம் அறிவியலோடு பொது அறிவை வளர்த்துக்கொள்ள இலவச கலர் டி.வி.கள்; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் உட்பட பல திட்டங்கள அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் நலம் பெற
தொழிலாளர் சமுதாயம் நலம்பெற, வளம்பெற அவர்கள் குடும்பத்தார் சுகம்பெற அடுக்கடுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் போற்றிடும் தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.