பிரபல பத்திரிகையாளர் மறைந்த தராக்கி சிவராம் உட்பட உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் தமிழகம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி முப்பெரும் விழாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வி.தேவராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்ட அறிவியல்மையம், கரிசல் திரைப்பட சங்கம்,
சர்வதேச வானொலி ஆகியன இணைந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி முப்பெரும் விழாவினை நடத்தின.
இவ்விழாவில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் அப்துல் ஜபார் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு சிறந்த பத்திரிகை ஆசிரியருக்கான விருதினை வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வி.தேவராஜுக்கு வழங்கினார்.
சிறந்த இளம் பத்திரிகையாளருக்கான விருது மலேஷிய மக்கள் ஓசை பத்திரிகையின் இந்தியப் பிரதிநிதி பா.சதிஷûக்கும் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை மக்கள் ஓசையின் இந்தியப் புகைப்படக்கலைஞர் வெங்கட்ட கிரிக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் யுகபாராதிக்கும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய வி.தேவராஜ் பேசுகையில் கூறியதாவது;
உங்கள் அனைவருக்கும் ஈழத்து மக்கள் சார்பில் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் இங்கு வாழ்த்துரை வழங்கவே அழைக்கப்பட்டுள்ளேன்.
வாழ்த்துரையுடன் எனது ஒரு சில மனப்பதிவுகளை உங்கள் அனைவரதும் முன்னிலையில் பதிவு செய்து கொள்வதற்கு உங்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் இன்றைய இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு.
இந்த வரலாற்று நிகழ்வில் எனது மன எண்ணங்களும் பதிவுகளாக ஒரு மூலையில் இருந்து விட்டுப்போகட்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
ஊடகத்துறை பரவலாகவே பல சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
உயிரிழப்புக்கள் அச்சுறுத்தல்கள் என ஏராளம்.
உயிரிழப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டு ஊடகத்துறை ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கவில்லை.
உயிர்களைப் பறிகொடுத்த சோகம்; துக்கம்; வலி என்பனவற்றையும் சுமந்துகொண்டு அச்சுறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டு ஊடகத்துறை தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாத நிலையில் கூட, மூச்சிழுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் ஊடகத்துறை எவ்விதத்திலும் மனம் தளராது தனது பணியினை முன்னெடுத்துச் செல்கின்றது.
உலகின் பெரும் பாலான நாடுகளின் ஊடகத்துறையின் உண்மை நிலை இதுதான்.
என்னைப் பொறுத்தவரை எனது 21 வருடகால பத்திரிகைத்துறை வரலாற்றில் சந்தித்த சவால்கள், சோகங்கள் பல.
சக பத்திரிகை நண்பர்களைப் பறிகொடுத்த நிலையில் அது தந்த சோகத்தை, தூக்கத்தை இன்றும் என்னுள் சுமந்து கொண்டிருக்கின்றேன்.
அதன் வலி என்ன என்பது எனக்குத் தெரியும்; அடுத்தடுத்து நான்கு பத்திரிகையாளர்களைப் பறிகொடுத்தவன் நான்.கொலைப் பயமுறுத்தலும், அச்சுறுத்தலும் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு; நன்றாகத் தெரிந்து கொண்டு; ஊடகத்துறையில் தொடர்ந்தும் பணியாற்றுவது என்பது, மகத்தான ஒரு விடயம்.
அவ்வாறான ஒரு மனிதரே உலகப் பிரபல்யம் பெற்ற பத்திரிகையாளர் தராகி என்று அழைக்கப்பட்ட சிவராம். எனது உயிர் நண்பன். கொலைப் பயமுறுத்தல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பத்திரிகைத் துறையில் சாதனைகள் பல படைத்தவர்.
அவர் அடிக்கடி கூறும் வார்த்தை இதுதான்
“"என்றாவது ஒரு நாள் எனது மண்டையில் போட்டு விடுவார்கள்.
அதுவரைக்கும் செய்யக்கூடியதை செய்து விடுவோம்.''
என்பதுதான்.
அவர் கூறியது போல் தான் மண்டையில் போட்டு அவரைக் கொன்று விட்டார்கள்.
எந்த நாடாளுமன்றம் தமிழர்களுக்கு அநீதி இழைத்து விட்டது என்று எழுதினாரோ
எந்த நாடாளுமன்றம் தமிழர்களுக்கும் ஒன்றும் கொடுத்துவிடாது என்று எழுதினாரோ
அந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் அவரது உடல் வீசப்பட்டுக்கிடந்தது. அந்த மகத்தான மனிதனை இன்று நினைக்கும் போதும் இதயம் கனக்கிறது. அதேவேளையில் பெருமிதமாகவும் இருக்கின்றது.
தான் மண்டையில் போடப்பட்டுக் கொலை செய்யப்பட்டு எங்கே வீசப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்து, அறிந்து அந்த வசனங்களைக் கூறிய மறுகணமே ஒன்றுமே தனது மனதில் இல்லை என்பது போல் அந்தப் பேனா போராளி தனது பணியில் ஈடுபட்ட அந்த நாட்கள் இன்றும் எனது மனதில் வந்து அலைமோதிச் செல்கின்றன.
இன்னொரு பத்திரிகை நண்பன் நடேசன்
“”என்னைக் கொல்லுங்கள்.. சுடுங்கள்
ஆனால் எனது முதுகில் குத்தியோ. சுட்டோ கொன்று விடாதீர்கள்.
என்று நண்பன் நடேசன் அடிக்கடி கூறுவதுண்டு.
நண்பன் நடேசன் என்ன கூறினாரோ அதுபோலவே அவர் நெஞ்சில் சுடப்பட்டு இறந்தார்.
இதேபோல் நிமலராஜன். செய்தி எழுதிக் கொண்டிருக்கும்போது சுடப்பட்டார்.
சுகிர்தராஜ் உண்மையை எழுதினார் என்பதற்காக சுட்டு வீதியில் போடப்பட்டார்.
இவ்வாறு பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.
உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காவும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை இவ்வேளையில் செலுத்துதல் பொருத்தம் என நினைக்கின்றேன்.
இன்றைய நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்களில் இந்த விடயம் இடம் பெறவில்லையாயினும் இன்றைய நிகழ்வின் ஏற்பாட்டார்கள் இதற்கு அனுமதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒருநிமிடம் எழுந்து நின்று அனைவரும் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.)
உங்களுக்கு நன்றி.இறுதியாக எனக்கு கொடுக்கப்பட்ட விடயத்திற்கு வருகின்றேன்.
ஊடகத்துறை புனிதமானது. அந்தப் பணியில் இணைந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
விஷேடமாக புதிதாகப் பிரசவித்துள்ள சர்வதேச வானொலி இதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.