சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் காந்த படுக்கை விற்பனை தொடர்பான சங்கிலி தொடர் திட்ட மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தங்க காசு மோசடி
அதேபோல், இப்போது தங்க காசு தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும் `கொஸ்ட் நெஸ்ட் எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் சங்கிலி தொடர் திட்டம் என்ற பெயரில் பலரிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்து வருவதாகவும், இதில் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதாகவும் ஏற்கனவே புகார் வந்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதுகுறித்து விசாரித்து வந்தனர். இப்போது இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது.
பெண் தொழில் அதிபர் உள்பட 7 பேர் கைது
இந்த சங்கிலி தொடர் திட்ட மோசடி தொடர்பாக, பெண் தொழில் அதிபர் உள்பட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் அந்த நிறுவனத்தில் இருந்து 71 கிலோ தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மோசடி திட்டம் எப்படி அம்பலத்துக்கு வந்தது என்பது பற்றிய விவரம் வருமாறு:-
போலீசில் புகார்
சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சம்பத்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
என் பெயர் தினேஷ்குமார். கடந்த ஓராண்டுக்கு முன்பு திருவான்மிïரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தங்க காசு சங்கிலி தொடர் திட்டத்தை பற்றி என்னிடம் கூறினார். ரூ.33 ஆயிரம் கட்டினால் 6 கிராம் தங்கம், வெள்ளி பாத்திரங்கள் தரப்படும் என்றும், அதன் பிறகு 3 நபர்களை இந்த திட்டத்தில் இணைத்து விட்டால் மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் செக் வீடு தேடி வரும் என்றும் அவர் என்னிடம் கூறினார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அவர் பேச்சை உண்மை என்று நம்பினேன்.
பணத்தை திருப்பி தர மறுப்பு
இது சம்பந்தமாக அந்த `கொஸ்ட் நெஸ்ட் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் மேலாளர் புஷ்பத்தை சந்தித்து பேசினேன். அவரும் என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறினார். இதனால் என்னிடம் இருந்த ரூ.33 ஆயிரத்தை அவர்களிடம் வழங்கினேன். அதன் பிறகு என்னால் 3 நபர்களை தங்க காசு சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்க்க முடியவில்லை. இதனால், அந்த திட்டத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன்.
ஆனால் அவர்கள், பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி என்னை விரட்டி அடித்தனர். இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அவர்கள் கொடுப்பதாக சொன்ன 6 தங்க காசுகளையும் தரவில்லை. எனவே எப்படியாவது அந்த மோசடிக்காரர்களிடம் இருந்து என் பணத்தை வாங்கி தாருங்கள்.
இவ்வாறு அவர் அவர் தனது புகார் மனுவில் கூறி இருந்தார்.
போலீசார் திடீர் சோதனை
இதே போன்ற புகாரை ஓட்டேரியை சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பெண்ணும் கொடுத்து இருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், தன்னை ஜெயந்தி, ஆனந்தி என்ற இரு பெண்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து சதி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த இரு புகார்களும் ஒரே மாதிரியாக இருந்ததால், தங்க காசு திட்ட மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சுருட்டும் கும்பலை பிடிப்பதற்காக உதவி கமிஷனர் ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சான்டியாகோ, பிரகாஷ், சர்வேஸ்வரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் உள்ள `கொஸ்ட் நெஸ்ட் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
71 கிலோ தங்க காசுகள் பறிமுதல்
இந்த சோதனையின் போது அங்கிருந்து 71 கிலோ தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.
மேலும் 4 கம்ப்ïட்டர்கள், ஏழு லேப்டாப் கம்ப்ïட்டர், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். முக்கிய தஸ்தாவேஜுகளும் கைப்பற்றப்பட்டன.
அப்போது அங்கு பணியில் இருந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் புஷ்பம், மற்றும் ஊழியர்கள் வித்யா, அரிபிரபாகரன், சந்திரசேகரன், அகஸ்டின், தண்டபாணி, சுரேஷ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த நிறுவனத்திற்கு போலீசார் `சீல்' வைத்தனர்.
சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து பெண் தொழிலதிபரும், தங்க நாணய நிறுவனத்தின் மேலாளருமான புஷ்பம் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் புளிந்தோப்பு, திரு.வி.க.நகர், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெண் தொழில் அதிபர் உள்பட 7 பேரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த துணிகர மோசடி குறித்து போலீசார் கூறியதாவது:-
ஏற்கனவே கைது ஆனவர்
இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் குறுகிய காலத்திற்குள் அதிக பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் பலவீனமான ஆண்கள் மற்றும் பெண்களை குறி வைத்து காய் நகர்த்தி வந்து உள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் தொழில் அதிபர் என்று சொல்லிக்கொள்ளும் புஷ்பம் ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அப்போது அவரிடம் இருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. தற்போது அவரிடம் இருந்து 71 கிலோ தங்க நாணயங்களை கைப்பற்றி உள்ளோம்.
ஹாங்காங்கில் தலைமறைவு
ஆந்திராவை சேர்ந்த விஜிஸ்வரன் என்பவர் இந்த கும்பலுக்கு தலைவனாக இருப்பது தெரியவந்து உள்ளது. தற்போது அந்த நபர் ஹாங்காங் நாட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. அந்த நபர் பிடிபட்டால் மோசடி பற்றிய முழு விவரமும் தெரிய வரும்.
இந்த கும்பலிடம் பணத்தை பறி கொடுத்து ஏமாந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். மேற்கண்ட நிறுவனம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் உரிமையாளர் முகமது ரித்கான் என்பவரை விசாரணைக்காக தேடி வருகிறோம்.
நடிகைகளிடம் விசாரணை
தங்க நாணயம் திட்டத்திற்கு மறைந்த வில்லன் நடிகரின் மனைவி மற்றும் வேறு சில நடிகைகள் மறைமுகமாக உதவியதாக சொல்வது பற்றி எங்களுக்கு தெரியாது. அப்படி இருந்தால் கண்டிப்பாக அவர்களிடம் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதற்கிடையே இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்த பலர் போலீஸ் நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களிடம் போலீசார் உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.