இலங்கைத் தமிழருக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப விடாது தடுத்து நிறுத்தியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்து தமிழக முதலமைச்சர் பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
மேதினத்தை முன்னிட்டு ஆவடியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய வைகோ மேலும் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணாதுரை கோவை வ.உ.சி. பூங்காவில் நடத்திய அரசு விழாவில் மேதின விடுமுறையை அறிவித்தார். அதை மறைத்துவிட்டு முதல்வர் கருணாநிதி ஏதேதோ சாதனைகள் குறித்து தனது மேதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார் கருணாநிதி. இலங்கையில் இரண்டாண்டுகளுக்கும்மேலாக தமிழர்கள் உண்ண உணவின்றி நோய்க்கு மருந்தின்றி வாடி உயிரிழந்து வருகின்றனர்.
அதற்காக நான் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக சேகரித்து வைத்துள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்பக் கோரினேன். உடனே அவரும் தனது செயலரை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தியது யார்? விரைவில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும்