இந்தியர்களின் உணவு முறை குறித்து அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமானது என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.
புஷ் கருத்து
உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களுக்கு நல்ல வசதி வாய்ப்பு ஏற்பட்டதால் தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். இதனால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்றார்.
இதற்கு பாரதீய ஜனதா, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் அதிபர் புஷ்சுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து எதுவும் தெரிவிக்காததற்கு பா.ஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
பொறுப்பற்ற கருத்துகள்
இந்திய மக்களின் உணவு முறை குறித்து பிறர் தலையிடுவதை எந்தவொரு இந்தியனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். இது குறித்து பேச அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலமாக, உலகின் `வெடிகுண்டு கண்காணிப்பாளர்' பணியில் இருந்து `உணவு கண்காணிப்பாளர்' பணிக்கு மாற புஷ் முயற்சித்து வருகிறார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமான செயல். தான், மாற்று ஏற்பாடாக வந்த பிரதமர் (டெபுடேசன் பிரதமர்) என்பதை அவர் நிரூபித்து விட்டார். அமெரிக்க அதிபரின் கருத்தை மிக தீவிரமாக கருத வேண்டும். அவருக்கு உறுதியான பதிலை தெரிவிப்பதோடு, அவரிடம் விளக்கம் வேண்டும்.
பாராளுமன்றத்தில் பிரச்சினை
உள்நாடு மட்டுமன்றி வெளியுறவு துறைகளிலும் பிரதமர் மன்மோகன் சிங் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். நாட்டின் கவுரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றுவதற்காகவாவது குறைந்த பட்சம் அவர் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இதற்கிடையே இந்திய மக்களின் உணவு முறை குறித்து புஷ் கூறிய கருத்துகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பவும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
அந்தோணி கண்டனம்
இந்த சூழ்நிலையில், திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, அதிபர் புஷ்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், `அதிபர் புஷ் தெரிவித்த கருத்து, கொடூரமான நகைச்சுவை. பெரும்பாலான விளை நிலங்களில் விளையும் பயிர்களை பயோ-டீசல் உற்பத்திக்காக அமெரிக்கா ஒதுக்கி உள்ளது. இதன் விளைவாக சர்வதேச அளவில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. உணவு பற்றாக்குறைக்கு காரணமான தனது தவறான கொள்கைகளை அமெரிக்கா திருத்தி கொள்ள வேண்டும்' என்றார்.