அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீதான் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திரும்ப பெற்றுக் கொண்டார்.
விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் மக்களவையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த முடியவில்லை.
இவ்வாறு அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் புதன்கிழமை பரிந்துரை செய்தார்.
இந்த எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , மக்களவை இன்று காலை கூடியதும் அவைக்கு வந்த பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வாயில் விரலை வைத்தபடியே, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மவுன போராட்டம் மேற்கொண்டனர்.
இதனால் கேள்வி நேரம் தொடங்கியதும் அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடியதும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்ட்சித் தலைவர் அத்வானியும் அவை நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி சுமூகமாக இயங்க தாங்கள் உறுதியளிப்பதாக தெரிவித்தனர்.
அவர்களது இந்த உறுதிமொழியையடுத்து 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த உரிமை குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையை திரும்ப பெறுவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
முன்னதாக காலை அவையை ஒத்திவைத்ததும் , அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார் சோமநாத் சாட்டர்ஜி.அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருவதாக எம்.பி.க்கள் அவரிடம் உறுதியளித்தனர்.