தமிழ்நாட்டில் மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித் மக்கள் கிராமத்தின் மையப் பகுதிக்குள் வருவதை தடுப்பதற்கு என்று 19 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட சுவரின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டு அந்த கிராமத்தில், தலித் மக்கள் சுதந்திரமாக நடமாட வழி செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
19 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலையடுத்து, அந்தச் சுவர் எழுப்பப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் அது தொடர்பான பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த வகையான தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்ததையடுத்து, தமிழக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகளில் இறங்கியது.
இது தொடர்பில் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, ஒரு சாரார் தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக் கூறி சுவரை இடிக்கவே விடமாட்டோம் என்றும் மறு சாரார் பாதை வேண்டி இடித்தே தீருவோம் என்றும் கூறிவந்த நிலையில், பாதையும் விடுகிறோம், பாதுகாப்பும் தருகிறோம் எனும்படி அந்தச் சுவரில் ஒரு நிலைவாசல் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.