07-05-2008
Article by:
uthsan s
 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் |
|
தவறைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வதற்கு பக்குவம் வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் சான்றோர் பேரவை தொடக்க விழாவையொட்டி "தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டினரின் பங்கேற்பு' என்ற கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்று அவர் பேசியது:
நல்ல கருத்துகளை உள்வாங்குவதற்கும் தவறைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வதற்கும் பக்குவம் வேண்டும். முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி. பக்குவம் நிறைந்தவர். மற்றவர்கள் கருத்தையும் அவர் ஏற்க வேண்டும்.
அரசின் கொள்கைகள், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை வெளிப்படையாகச் சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது. கோபமே வரக்கூடாது.
வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போல் திட்டங்கள், கொள்கைகளை வெளிப்படையாக அறிவித்து விவாதம் நடத்த வேண்டும். கருத்துகள் வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டும்.
அரசைப் பாராட்டினால் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு தரப்படுகிறது. புகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் மயங்குகிறார்கள். குறைசொன்னால் எரிச்சல் வருகிறது.
யாராவது எதைப்பற்றியாவது குறை சொன்னால், ஏன் குறை சொல்கிறார்கள் என்று அரசு அதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
சாதக, பாதகங்களை தைரியமாக சொல்பவர்களை முதல்வர் கருணாநிதி பக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடர்பாக அமைச்சர்களை வைத்துக்கொண்டு எத்தனை முறை விவாதம் நடைபெற்றிருக்கிறது?
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறு, குறுந்தொழில்களை ஒருங்கிணைத்துச் செல்லும் வகையில் கொள்கைகள் வகுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதிக்க வேண்டும்.
விவசாயத்துறை லாபகரமானதாக இல்லை. இலவச டி.வி. தருவதற்கு பதிலாக இலவச விதையைக் கொடுங்கள் என்று நான் சொன்னால் என் மீது கோபம் வரும். சாமானியனையும் உள்ளடக்கிய வளர்ச்சி வர வேண்டும்.
தமிழகத்தில் தகவல்தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு குடிமகன் என்ற முறையில் கேட்கிறேன், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள 50 லட்சம் பட்டதாரிகளில் எத்தனைப் பேருக்கு இந்த நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.
வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு சிறப்பு பயிற்சி ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா?
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைசெய்பவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்? பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றுத்திட்டம் தீட்ட வழியில்லை.
தமிழ்நாடு ஒளிர்கிறது. ஆனால் தமிழர்கள் ஒளிரவில்லை. தமிழர்கள் முன்னேறுவதற்கு தரமான கல்வியும், மாணவர்கள் 6-வது வகுப்பு படிக்கும்போதே தொழிற்கல்வியும் கொடுக்க வேண்டும். விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் புஷ் மரபணு மாற்ற விதையை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்தியர்களின் உணவுப் பழக்கமே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்' என்றார் ராமதாஸ்.
தமிழ்நாடு சான்றோர் பேரவை
யின் தலைவர் எம்.ஜி. தேவசகாயம், தொழில்துறை முன்னாள் செயலாளர் வி. செல்வராஜ், தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்கத்தின் தலைவர் ஆர். சண்முகவேலு, மூத்த பத்திரிகையாளர் ஜே.வி. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
|