இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவதில், தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிக் கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.
இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சேபணைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் எட்டாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்திலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
அணுசக்தி வழங்கும் நாடுகளின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னதாக, சர்வதேச அணுசக்தி அமைப்புடன் இந்தியா தொடர்பான பிரத்யேக பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட வேண்டும். அதற்கு இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலை நேற்றைய கூட்டத்தில் அரசு கோரியது. ஆனால், இடதுசாரிக் கட்சிகள் அதுதொடர்பாக பல்வேறு விளக்கங்களைக் கேட்டிருக்கிறது.. அடுத்த கூட்டம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று அரசுத் தரப்புத் தகவல்கள் கவலை வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.