ப்ளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டு மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த நாமக்கல் மாணவி தரணி 1200க்கு 1182 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமாரும் இதே மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இதன் மூலம் மாநில அளவில், முதல் இடத்தை இவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரம்யாவும், நாமக்கல் மாணவர் குமார் விக்ரமும் 1200க்கு 1181 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.
தமிழ் அல்லாத வேறு பாடங்களை முதல் பாடமாக எடுத்து பயின்றவர்களில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த, அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி ஆஷா கணேஷ் 1200க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, எஸ்டிஏபி பள்ளி மாணவர் முரளி கிருஷ்ணன் 1188 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பெற்றுள்ளார்.
டி.ஏ.வி. கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.