கர்நாடகாவில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தலில், மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக, 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இன்றைய தேர்தலில் 440 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 953 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 1.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பது தேர்தலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன்கள் குமாரசாமி, ராவண்ணா, பாரதிய ஜனதா தலைவர் வெங்கய்யா நாயுடு, முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா ஆகியோர் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் இன்று காலை தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில், மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் 16-ம் தேதி 2வது கட்டமாகவும், வரும் 22ம் தேதி 3வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.