சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ சனிக்கிழமை தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரச்னைகளில் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.
நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பணவீக்கம், சர்வதேசச் சூழ்நிலை என்ற காரணங்களை மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.
முந்தைய ஆண்டை விட உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிக்கு லாபம் கிடைக்கவில்லை. சாதாரண வியாபாரிகளுக்கும் லாபம் இல்லை. விலைவாசியும் உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம். முன் பேர வணிகம், ஆன் லைன் வணிகம் மற்றும் யூக வணிகம் என்ற சூதாட்டம் தான்.
மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருப்பதால் விலைவாசி உயர்வு பாதிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். யாருக்கு வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. மணல் கொள்ளையர்களுக்கும், பெரும் பண முதலைகளுக்கும் தான் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. ஆனால், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லை.
தமிழகத்தில் காவல் துறையின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நல்ல கூட்டணி உள்ளது. நாங்கள் நட்பு, நேசம், தோழமையோடு இயங்கி வருகிறோம்.
தி.மு.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீதான குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காதது ஏன்?
இலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப கடந்த 14 மாதங்களாக அனுமதி அளிக்காதது ஏன்? இதுகுறித்து பிரதமரிடம் கேட்டால் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதே என்கிறார். இதற்குப் பின்னணியில் இருந்து தடுப்பது யார்?
சேது சமுத்திரத் திட்டம் தேவையான திட்டம். அதை இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிவிட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.
மாற்று வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை.
உத்தபுரம் பிரச்னையில் மலையில் தங்கியுள்ள மக்களிடம் அரசு பேச்சு நடத்தி அவர்களையும் சமாதானப்படுத்தி, இரு தரப்பினரையும் இணக்கமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
மத்தியில் உடனடியாக தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தண்டனை காலம் முடிந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றார் வைகோ.