ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம் உள்பட, மத்திய அரசின் உயர்திறன் கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இட-ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், 27 சத இட-ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட-ஒதுக்கீடு சலுகை அளிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதனிடையே, கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில், முதுகலை வகுப்புக்களுக்கு புதிய இட-ஒதுக்கீடு முறையில் மாணவர்களைச் சேர்க்கத் தடை விதி்க்கக் கோரி மாணவர் ஒருவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவு, கடந்த மாதம் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இட-ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தது. அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலீத்த நீதிபதிகள், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட-ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அதை அமல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் எப்படித் தடை விதிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, இட-ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உயர் கல்வி நிறுவனங்கள் தொடரலாம். ஆனால், சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருக்கிறது