"தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதையின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாகவும், அவரது இலாகா, கால்நடைத் துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார்.
ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கடந்த 14 ம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும் அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கருணாநிதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பூங்கோதையின் ராஜினாமாவை முதலமைச்சர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு, அதனை ஆளுநர் பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தார்.
அதனை ஆளுனரும் ஏற்றுக் கொண்டு விட்டதாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூங்கோதை வகித்த சமூக நலத்துறை இலாகா, கால்நடைத் துறை அமைச்சரான கீத ஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அவர் வகித்து வந்த கால்நடைத் துறை இலாகா , வனத் துறை மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டு, அவரது அமைச்சர் பதவியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவர் ஏற்கனவே வகித்துவரும் வனத் துறை மற்றும் ஊரக தொழில் துறைகலுடன் , கால்நடைத் துறை இலாகாவையும் சேர்த்து கவனிப்பார் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.