மைதானத்தில் மோதிக்கொண்ட பிரச்சனையில், கங்குலி, வார்னே ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தின் நடுவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 19வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கங்குலியின் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா அணி தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தின்போது, கங்குலி அடித்த பந்தை சுமித் பாய்ந்து விழுந்து கேட்ச் செய்தார். ஆனால், பந்து தரையில் பிட்ச் ஆனதாக நடுவரிடம் கங்குலி வாக்குவாதம் செய்தார். இறுதியில் 3வது நடுவர் ஆசாத் ராப்பின் தீர்ப்புக்கு விடப்பட்டது. இது கங்குலிக்கு சாதகமாக அமைந்ததால் வார்னே ஏமாற்றம் அடைந்தார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. போட்டி முடிந்ததும் இருவரும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் புகார் கூறினர்.
இந்த மோதல் விவகாரம் தொடர்பாக, கங்குலி, வார்னே ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதோடு, இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்காததற்காக நடுவர் பிரதாப் குமாரும் ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.