ஐ.பி.எல். போட்டியில் விளையாட அக்தர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். நாளை பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடுகின்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் அந்நாட்டு கிரிக்கெட் சபையை விமர்ச்சித்ததைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அவர் வெளிநாட்டு போட்டிகளில் ஆடத் தடையில்லை என்று தெரிவிக்கப்படடது. ஆனால், தடை விதிக்கப்பட்ட அக்தரை ஐ.பி.எல். போட்டியில் விளையாட அனுமதிக்க முடியாது என்று போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து தன் மீதான தடையை எதிர்த்து மேன் முறையீடு செய்த அக்தருக்கு தடையை தற்காலிகமாக நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்நது அக்தர் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகின்றார்.
இதற்காக அக்தர் நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். அவர் அங்கிருந்து கொல்கத்தா செல்கின்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆட இருக்கும் அவர் பெங்களூருக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை 8 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் அக்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்;
" இந்தியாவுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கின்றேன். அணிக்கு எனது நல்ல பங்களிப்பைக் கொடுப்பேன். என்னை அரவணைத்துக் கொண்ட இந்திய மக்களுக்கும் எனக்கு ஆதரவளித்த அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 4 மாத காலமாக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடுமையாக உழைப்பேன். அணிக்கு எனது உரிய பங்களிப்பை அளிக்க விரும்புகின்றேன். நடுவர் மன்றத்தில் நிலுவையிலிருப்பதால் எனக்கு வழக்கு குறித்து எதுவும் பேச விரும்பவில்லை" என்றார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரப், அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கைத் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். அக்தர்- அஷ்ரப் இடையே அரசியல்வாதிகள் தலையீட்டின் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டைத் தொடர்ந்து தான் இந்த வழக்கு வாபஸ் படலம் நடந்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது அக்தர் அஷ்ரப்பிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் தான் அக்தர் மீதான தடை நீக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் நவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
" அக்தர் தடை விலக்கப்பட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது மகிழ்ச்சிதான். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக எந்த வித போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் திடீரென விளையாடும் போது தனது திறமையை நிரூபிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் திறமை மற்றும் அனுபவம் மீது நம்பிக்கையுள்ளது. அக்தர் சாதித்துக் காட்டுவார் என்று நம்புகின்றோம்" என்றார்.
இதே கருத்தை பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்தனர்.
உடல் தகுதி மற்றும் மோசமான நடத்தைகள் காரணமாக இவர் பெப்ரவரி 2006 க்குப் பின் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சாம்பியன் கிண்ணத்தில் சில போட்டிகள் ண்`ருவென்ரி -20' உலகக் கிண்ணம் என பல தொடர்களில் பங்கேற்காத அக்தர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து துவண்டு கிடக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக சாதிப்பாரா என்பதை கிரிக்கெட் உலகமே எதிர் பார்த்துள்ளது.