"சகவீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன் இன்னும் திருந்தவில்லை என்பது தெளிவாகிறது. அவரது முகத்திரை கிழிந்துவிட்டது,'' என்று கடுமையாக விமர்சிக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 10வது லீக் போட்டியில் யுவராஜின் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்த ஹர்பஜன், அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது தொடர்பாக ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அடுத்து இந்திய கிரிக்கெட் போர்டும்(பி.சி.சி.ஐ.,) நடவடிக்கை எடுக்க உள்ளது. இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்த வக்கீல் சுதிர் நானாவதியை கமிஷனராக நியமித்தது. ஹர்பஜன், ஸ்ரீசாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதன் அறிக்கை பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் நான்கு போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் தொடர்ந்து தவறுகள் செய்து வருகிறார். சகவீரர் என்ற எண்ணம் கூட இல்லாமல் ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரம் மூலம் அவரது முகத்திரை கிழிந்துவிட்டது என்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: தன்னுடன் 20 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் இணைந்து விளையாடிய சகவீரர் ஒருவரை ஹர்பஜன் அறைந்துள்ளார். இதிலிருந்து ஹர்பஜனை பற்றி அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் மீண்டும் தவறு செய்துள்ளார்.
சிட்னி டெஸ்டின் போது சைமண்ட்சிடம் இனவெறியை துõண்டும் வகையில் நடந்துகொண்டார். இதில் அவருக்கு முதலில் மூன்று போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் அது போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக குறைக்கப் பட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் போட்டிகளில் பந்துவீச தாமதமாகிவிட்டது என எனக்கு பல போட்டிளில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஹர்பஜனுக்கு அதைவிட சற்று கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது அவ்வளவு தான். இவ்விரண்டுக்கும் வேறு எந்த பெரிய வித்தியாசமும் கிடையாது.
ஐ.பி.எல்., தொடர் கிரிக்கெட்டிற்கு பல புதிய ரசிகர் களை கொண்டுவந்துள்ளது. எதையும் சரியாக செய்தால் எந்த பிரச்னையும் தோன்றாது. இதனால் சர்வதேச கிரிக்கெட் பாதிக்கப்படும் என்று கூறிவிட முடியாது. இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.
அறிக்கை ஒத்திவைப்பு : ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ., விசாரணை கமிஷனர் நானாவதி நாளை அறிக்கை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால், இதை ஒரு நாள் ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து நானாவதி கூறுகையில்,""குஜராத் உயர் நீதிமன்றத்தில் சில வழக்குகள் மீதமிருப்பதால். ஹர்பஜன் விவகாரத்தில் வரும் 13ம் தேதி பி.சி.சி.ஐ.,யிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறேன். பின்னர் அது ஒழுங்குமுறை கமிட்டியிடம் அளிக்கப்படும். அவர்கள் தான் தண்டனை குறித்து முடிவெடுப்பார்கள். குற்றம் உறுதி செய்யப்பட்டால், அசார், ஜடேஜா போன்று வாழ்நாள் தடைகூட அளிக்கப்படலாம்,'' என்றார்.