படத்தில் ஐந்து ஹீரோயின்கள் என்பதால், ராமன் தேடிய சீதைகள் என்றே தலைப்பு வைத்திருக்கலாம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அவர்களில் இருவர் மட்டுமே வந்திருந்தார்கள். சேரன்தான் ஹீரோ என்றாலும், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பசுபதி. சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெகன் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது முதலில் மறுத்துவிட்டாராம் சேரன். அதற்கு காரணம் இருக்கிறது. இன்னொரு டேக் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால்கூட, சேரன் சார் தப்பா எடுத்துப்பாரோ என்ற எண்ணம் வரும். சுதந்திரமாக வேலை செய்ய முடியாது. அதனால்தான் வேண்டாம் என்று மறுத்தாராம். ஆனால், சேரன் நடிக்க ஒப்புக்கொண்டால்தான் இந்த வாய்ப்பே கிடைக்கும் என்ற நிலை இருக்கும் போது சரி சொல்வதை தவிர வேறு வழி? ஆனாலும், சேரன் நினைத்தது போல் இல்லாமல் சகஜமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஜெகன். படத்தை பற்றிய தகவல்கள் இவ்வளவுதான். மற்ற விஷயங்களை பேசுவதற்கு முன் உணர்ச்சிவசப்பட்டார் சேரன். (சாதாரணமாகவே அப்படித்தான் உணர்ச்சி வசப்படுவார் அவர். அன்று சற்று அதிகம்) விஷயம் என்ன? படத்தில் நவ்யா நாயருக்கு இவர்தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்று சில பத்திரிகைகளில் எழுதிவிட்டார்களாம். எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை உணராமல் எழுதி விடுகிறீர்கள். அது குடும்பத்தின் அமைதியை குலைத்துவிடுகிறது என்பதை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். சிவாஜியும் பத்மினியும் 38 படங்களில் ஒன்றாக நடித்தார்களாம். எப்படிதான் அப்படி நடித்தார்களோ? இப்போது அப்படி நடிக்க முடியுமா என்பதையும் நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. உழைப்பவர்களை தட்டிக் கொடுங்கள் என்றார் பத்திரிகையாளர்களிடம். உள்ளுக்குள் புழுங்காமல் வெளிப்படுத்தியதால், சேரனின் கோபம் சில டிகிரிகளாவது குறைந்திருக்கும்!