சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜீத் நடிக்க, கெளதம் மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் இந்தியில் ஒரு படம் இயக்கியது. இப்போது மறுபடியும் தமிழுக்குத் திரும்புகிறது. இந்த முறை சிவாஜியுடன் கை கோர்க்கப் போவது அஜீத்.
இப்படத்தை இயக்கவிருப்பவர் கெளதம் மேனன். தற்போது ராஜு சுந்தரம் இயக்கத்தில், ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஏகன் படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு சிவாஜி பிலிம்ஸுக்கு வருகிறார்.
அஜீத்தும், கெளதமும் இணைவது இதுவே முதல் முறை. இப்படத்திற்கு கெளதமின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார்.
இது அதிரடிப் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் பிரபு தெரிவித்துள்ளார். படத்திற்கு பாலிவுட் நாயகி ஒருவரை ஹீரோயினாகப் போட முடிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக சிலருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
இப்படத்தை செப்டம்பர் மத்தியில் ஆரம்பிக்கலாம் என அஜீத் கூறியுள்ளாராம். இப்படத்தில் பிரபவும் இருக்கிறாராம்.
சரி, புதிய பறவையை ரீமேக் செய்யப் போவதாக கூறுகிறார்களே என்று பிரபுவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அப்பாவின் எந்தப் படத்தையும் திரும்ப எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.