புதிய ஜேம்ஸ்பாண்டாக அவதாரமெடுத்துள்ள டேனியல் க்ரெய்க், அடுத்த பாண்ட் படமான குவாண்டம் ஆப் ஸோலேஸில் நடிப்பதற்காக தனது உடம்பை ரூ.40 கோடிக்கு (5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்) காப்பீடு செய்துள்ளார்.
கேஸினோ ராயல் மூலம் அழகான, கவர்ச்சியான ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ எனப் பெயர் பெற்ற டேனியல் க்ரெய்க், தற்போது அடுத்த பாண்ட் 007 படமான குவாண்டம் ஆப் ஸோலேஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதுவரை வந்த பாண்ட் வரிசைப் படங்களிலேயே அதிக சண்டை மற்றும் வீர சாகஸங்கள் நிறைந்த படமாக இதை உருவாக்கி வருகிறார்களாம். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது உள்ள ரிஸ்க்குகளை மனதில் கொண்டு, படப்பிடிப்பு துவங்கும் முன்னரே, தனது உடலை ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனத்திடம் இன்ஸ்ஷ்யூர் செய்துவிட்டாராம் க்ரெய்க்.
இதுகுறித்து ஆரம்பத்தில் எந்தத் தகவலையும் தெரிவிக்காமலிருந்த க்ரெய்க், லண்டனிலிருந்து வெளியாகும் சன் பத்திரிகை செய்தி வெளியிட்ட பிறகு நேற்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இதில் மறைக்க என்ன இருக்கிறது.... இந்தப் படம் ஒரு வழக்கமான கதையல்ல. பல சாகஸங்களை ரிஸ்க் எடுத்துச் செய்ய வேண்டியுள்ளது. எனவேதான் இப்படி இன்ஷூர் செய்ய வேண்டியாகிவிட்டது. இதனால் ஆபத்தான காட்சிகளில் நடிக்க நான் பயந்துவிட்டதாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு ஸ்டன்ட்மேனுக்கும் இந்த அடிப்படை விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நிருபர்களிடம் கூறியுள்ளார் டேனியல் கிரெய்க்.
கோடம்பாக்கம் 'டூப்' மாஸ்டர்கள் கத்துக்க வேண்டிய சமாச்சாரமாச்சே...!