அழகழகான 32 பிஞ்சு முகங்கள். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாவிட்டாலும், அவர்கள் முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகம். இவர்கள் அத்தனை பேரையும் துரத்திக் கொண்டிருக்கிறது மரணம். கோவிலில் தஞ்சமடைய வேண்டிய அந்த குழந்தைகளின் பெற்றோர்கள், கோவிலாக நினைத்து தஞ்சமடைந்திருக்கும் இடம் நடிகர் லாரன்சின் வீடு.
மதுரை, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அங்கே வந்திருக்கும் கூலித்தொழிலாளர்களான அந்த பெற்றோர் முகத்தில் கொஞ்சம் நிம்மதியும் கலந்திருப்பதற்கு காரணம் லாரன்ஸ்! ஊனமுற்றவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை விளக்கேற்றியவர், சமீப காலமாக 40க்கும் மேற்பட்ட அனாதை சிறுவர்களையும் தனது பாராமரிப்பில் வளர்த்து வருகிறார். அவர்களுக்கு கல்வியும் போதிக்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்காக தான் கட்டிய சொந்த வீட்டை ஒதுக்கிவிட்டு வாடகை வீட்டில் குடியிருக்கிறார் லாரன்ஸ்.
லாரன்ஸ் வளர்க்கும் நாற்பது அநாதை குழந்தைகளோடு இணைந்தவர்கள்தான் இந்த முப்பத்தியிரண்டு சிறுவர் சிறுமியரும். கண்கலங்க பேச ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். “நான் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் செய்து அதில் வருகிற வருமானத்தை கொண்டு மருத்துவ உதவிகள் செய்து வருகிறேன். இந்த முறையும் அப்படி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் மயக்கமடைந்துவிட்டான். மருத்துவ மனைக்கு கொண்டு போனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்றார்கள். இன்னும் நிறைய குழந்தைகளின் நிலையும் இதேதான். காத்திருப்பதற்கு ஏது நேரம்? அதனால்தான் டொனேஷன் கேட்டு பலரிடமும் கையேந்த வேண்டிய நிலை. இந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை கூட தவறவிடக்கூடாது. அதற்காக தயவு செய்து உதவுங்கள்” என்றார். பக்கத்தில் அவரது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தன பிஞ்சுகள்.
அந்த நிமிடமே இயக்குனர் பேரரசு தனது பங்காக 50 ஆயிரத்தை அளித்தார். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் சினிமா பிரஸ் கிளப் சார்பாக பத்தாயிரத்தை அளித்தார்கள். கடலில் பெருங்காயத்தை கரைத்த மாதிரிதான் இந்த உதவி. இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் உங்களால் முடியும் அந்த குழந்தைகளை காப்பாற்ற. தனியொரு மனிதராக தன்னை உருக்கி கொண்டிருக்கும் லாரன்சுக்கு கைகொடுத்தால், இன்னும் எத்தனையோ உதவிகள், சேர வேண்டியவர்களுக்கு முறையாக போய் சேரும். அன்புள்ளங்களே... பரிசீலியுங்கள்.
உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி-
லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்,
பதிவு எண் 1372/2005
2/4 4-வது குறுக்கு தெரு, 3-வது அவன்யூ,
அசோக் நகர், சென்னை 600 083.
நேரடியாக வங்கிக்கு பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்கண்ட சேமிப்பு கணக்கு எண்ணிற்கு (S.B.Account) அனுப்பலாம்.
Standard Chartered Bank - S.B A/C No. 4360 Ashok Nagar Branch.
Canara Bank S.B A/C No - 46149 Ashok Nagar Branch.
State Bank Of India - S.B A/C No. 303557224 Ashok Nagar Branch