விலங்குக்கும் விஜய்க்கும் 7ம் பொருத்தம் போல. சமீபத்தில் திரைக்கு வந்த அவரது குருவி படம் உயரப் பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அடுத்து அவர் நடிப்பதாக இருந்த படத்தின் தலைப்பே பறிபோய் விட்டது.
முன்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த போலீஸ் கதையான 'புலி' படம், பவன் கல்யாண் கைக்கு மாறியது. இதையடுத்து பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கு 'சிங்கம்' என்று பெயர் சூட்டினர். இப்போது அந்தப் பெயரும் கை நழுவியுள்ளது.
குருவி படம் எதிர்பார்த்த மாதிரி போகாத நிலையில், பிரபு தேவா துணையுடன் சிங்கத்தில் கர்ஜிக்கத் தயாராகிக் கொண்டிருந்தார் விஜய். இந்நிலையில் படத்தின் டைட்டிலில் பிரச்னை கிளம்பியுள்ளது. இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்துக்கு ஏற்கெனவே இந்தப் பெயரைச் சூட்டி, பதிவும் செய்துவிட்டாராம். இந்த டைட்டிலை இனி விட்டுத் தரமுடியாது என்றும் கூறிவிட்டார் ஹரி.
நேற்று சென்னையில் நடந்த சேவல் பட துவக்க விழாவில் பேசிய இயக்குநர் ஹரி இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், சேவல் படம் முடிந்ததும் நான் இயக்குகிற படம் சிங்கம். இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். மற்றபடி யாருடைய படத்தைப் பற்றியும் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்த டைட்டிலை மாற்றும் அல்லது விட்டுத் தரும் எண்ணம் இல்லை. சேவல் முடிந்ததும் சிங்கம் படப்பிடிப்பு தொடங்கும் என்றார் ஹரி.
பிரபுதேவா-விஜய் கூட்டணிக்கு வேறு வழியில்லை... இப்போதைக்கு சிங்கத்தை அவர்களும் விட்டுவிட்டதாகவே தெரிகிறது.
கவலைப்படாதீங்க, ரூம் போட்டு யோசிச்சா நல்ல டைட்டில் கிடைக்கும்