திபெத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்களை அடுத்து அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. சார்பில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காது.
சபையில் இது குறித்து விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. திபெத் பிரச்னையால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே இது குறித்து விவாதிக்கப்படாது. திங்கள்கிழமை கூட்டத்திலும் கூட இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் விடாலி சுர்கின்னும் இதே கருத்தைத் தெரிவித்தார். மியான்மரில் ராணுவ அடக்குமுறையின்போது கூட ஐ.நா. தலையிடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் போராட்டம்: ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலீஸôர் பலப் பிரயோகம் செய்து கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனக் கொடியை தீயில் எரித்தனர்.
ஆஸ்திரேயாவில் சிட்னி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத் கொடியை அவர்கள் பிடித்திருந்தனர். சீனாவுக்கு எதிராக முழக்கமும் எழுப்பினர்.