திபெத் பிரச்சனை தொடர்பாக சீன அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக, புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தலாய்லாமாவின் பிரதிநிதிகளான லோடி கியாரி மற்றும் கெல்சங் கியால்ட்சன் ஆகியோர் தர்மசாலாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற பெரும்பாலான விவகாரங்களுக்கு உடன்பட தாங்கள் மறுத்துவிட்டதாகவும் , அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு மட்டுமே இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் கூறினர்.
பீஜிங்கில் ஆகஸ்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாகவே அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என தலாய் லாமா தரப்பு வலியுறுத்தியுள்ளது.
திபெத்தில் சீன காவல்துறையின் ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள திபெத்தியர்களை விடுவிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் பேச்சுவார்த்தையின் தங்கள் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டதாக கியாரி தெரிவித்தார்.