கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்ட 'ஹின்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரை விடுவிக்க மலேசிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினராக உள்ளனர்.இதில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இந்திய வம்சாவளியினருக்கு சம் உரிமை அளிக்க கோரி இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு ('ஹின்ட்ராப்')வைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக 'ஹின்ட்ராப்' தலைவர்கள் 5 பேர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை விடுவிக்க கோரி 'ஹின்ட்ராப்' தலைவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை , உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதனையடுத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றமாக கருதப்படும் ' ஃபெடரல் கோர்ட்' டில் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், உயர் நீதிமன்றம் விடுதலை கோரிக்கையை நிராகரித்ததில் தவறில்லை எனக் கூறி, அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி 'பெடரல் கோர்ட்'டில் மற்றொரு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக 'ஹின்ட்ராப்' தலைவர்களின் வழக்கறிஞர் கர்பல் சிங் தெரிவித்தார்.