சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு சுவிற்சர்லாந்து வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் மங்கள விளக்கினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிறீ ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து கௌசல்யன் கலைக்கூட மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் கலை பண்பாட்டுக்கழக இசைக்குழுவினர் வழங்கிய இசையில்
இளம் இன்னிசைக்குரல் - 2008
ஆண் இன்னிசைக்குரல் - 2008
பெண் இன்னிசைக்குரல் - 2008
போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் ரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் "ஈழம் போய்ஸ்" வழங்கிய மேற்கத்தேய நடனம், சிறப்புரை, பரதசேத்திரா நடனாலய மாணவிகளின் எழுச்சி நடனம், கனடாவில் இருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளாரின் உரை, கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகியின் கௌரவப்பாடல் ஆகியன இடம்பெற்றன.
போட்டி நிகழ்வின் நடுவர்களாக மதுரக்குரலோன் கண்ணன், திருமதி சோபா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இளம் இன்னிசைக்குரல் வரதராஜன் வைஸ்ணவியும் முத்துக்குமார் பிரவீனாவும் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர்.
ஆண் இன்னிசைக்குரல் - 2008 ஆக பாலகுமார் பாலசுப்பிரமணியம்
ஆண் இணை இன்னிசைக்குரல் - 2008 ஆக சிவகுரு குரு
பெண் இன்னிசைக்குரல் - 2008 ஆக தர்சினி திலீபன்
பெண் இணை இன்னிசைக்குரல் - 2008 ஆக றெசீனா யோகசிங்கம்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
பாடகர்களுக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழோடு கரம்கோர்த்து நிற்கும் வர்த்தகப் பெருந்தகைகள் வழங்க
நடுவர்கள், கலைஞர்கள், உளவளத்துறைப் பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் ஆகியோருக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர்.
தொடர்ந்து ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய நன்றியுரை இடம்பெற்றது.
இளம் இன்னிசைக்குரல் - 2008
ஆண் இன்னிசைக்குரல் - 2008
பெண் இன்னிசைக்குரல் - 2008
ஆக தெரிவாகிய மூவரும் இந்த வருட இறுதியில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய இன்னிசைக்குரல் நிகழ்வில் கலந்து போட்டியிடவுள்ளனர்.












